திரைப்பட விமர்சனம் தானே என்று சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டாம். மிக சிறந்த படத்தை, மிக சிறந்த விதமாக விமர்சிக்க ஆசை. வாசிப்பாளர்கள் ஏற்றுக் கொண்டால், என்னை பாதித்த, தனித்தன்மையுடன் கூடிய பழைய படங்களை பற்றி விவரிப்பேன்.
இந்த மூன்று மாதத்தில், மூன்று வெவ்வேறு சானல்களில் ஒரே திரைப்படத்தை மீண்டும், மீண்டும் பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. விரும்பி பார்த்தேன். கறுப்பு வெள்ளை படம் தான். முப்பதி மூணு வருஷங்களுக்கு முன்னால் வந்தது. பத்து வருஷங்களுக்கு முன்னால் திரையரங்கில் பார்த்த படம் தான்.
என்னை மிகவும் கவர்ந்த படங்களில் இதுவும் ஒன்று. மகரிஷி என்பவர் எழுதிய நாவல். குமுதம் குழுமத்தின் வெளியீடான மாலைமதி எனும் பத்திரிகையில் முழு நாவலாக வெளி வந்தது. நாவலை படிக்கும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது. தனுஷின் மாமனாரும், ஜோதிகாவின் மாமனாரும் இணைந்து நடித்த படம். "புவனா ஒரு கேள்விக்குறி"
ரஜினியும், சிவகுமாரும் நடித்த படம். இதை திரைப்பட விமர்சன இடுகையாக மட்டும் இல்லாமல், மகரிஷியின் நாவல் குறித்த விமர்சனமாகவும் பார்க்கலாம். இந்த கதையின் நாயகர்களின் பாத்திரமே
மிக வித்தியாசமானது. மனிதர்களின் முரண்பாடுகளை பாத்திர வடிவில் அழகாக சித்தரித்து காட்டியது.
நல்லவன் போல் தோற்றமளிக்கும் ஒருவன்... அதாவது சிகப்பாக, அழகாக, நேர்த்தியாக, தன்மையுடன் பேசுபவனாக உள்ள ஒருவன் எல்லா
அயோக்கிய தனங்களையும் செய்கிறான். இதற்கு எதிர்மறையாக, அசிங்கமாக உள்ள ஒருவன்... கருப்பாக, பரட்டை தலையுடன், நக்கலாக பேசும் ஒருவன் மிக நல்லவனாக இருக்கிறான். ஏமாந்த பெரும்பாலான பேர்கள்- தோற்றத்தை பார்த்து, லாவகமான பேச்சை பார்த்து தான் ஏமாறுகிறார்கள். சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில், மாதவன் பொய் சொல்லி வடிவேலுவை பொது மக்களிடத்தில் அடிவாங்க வைப்பார். வடிவேல், அவன் பொய் சொல்றான்ய்யா என்று சொல்வார். அதற்கு ஒருவன், "செகப்பா இருக்கிறவன் பொய் சொல்ல பேசமாட்டான்ய்யா"
என்பான். "பொய் பேசறதுல செகப்பு, கருப்பு என்னடா. இதென்னடா புது லாஜிக்கா இருக்கு" என்பார் வடிவேலு.
அது உண்மைதான். அழகு தான் நம்மை ஏமாற்றுகிறது. "அழகா பேசினான்யா. அதுல தான் ஏமாந்துட்டேன்" என்று எவ்வளவோ பேர் சொல்லக் கேட்டிருக்கிறோம். வசிகரமும், லாவண்யமும்- சில நேரம் ஏமாற்றவும் பயன் படுத்தப்படுகிறது தானே. பெண்கள் ஏமாந்து போய் தங்களை இழப்பது கூட அழகுகளிடம் தான். அப்படி தான் நாயகியும், நாகராஜனிடம் (சிவகுமாரிடம்) தன் தன்னை இழக்கிறாள். சிவகுமார்
படத்தில் ப்ளேபாயாக வருவார். அவரது வேலையே பெண்களை ஏமாற்றுவது தான். ஆனால் அதோடு தன் வாழ்க்கையின் வளர்ச்சியிலும் கண்ணாக இருந்து பணக்காராகவும் ஆகி விடுகிறார். கெடுக்கப்பட்ட புவனாவை (சுமித்ரா) கறுப்பாக, அசிங்கமாக இருக்கும் சம்பத் (ரஜினி) மணந்து கொள்கிறார்.
ஒரு பணக்காரியை சிவகுமார் மணந்து கொள்கிறார். காலங்கள் ஒடுகிறது. இளமையில் நாகராஜன் செய்த தவறுகளுக்கு நடுத்தர வயதில் தண்டனை கிடைக்கிறது. அவனது உயிரணுவில் வீரியம் குறைந்து அவனால் தந்தையாக முடியாத நிலை. புவனாவை அவன் கெடுத்ததன்
மூலம், அதனால் ஒரு குழந்தையை பெறுகிறாள் புவனா. அந்த குழந்தையை புவனாவிடமும், சம்பத்திடமும் கேட்கிறான். அவர்கள் கொடுப்பார்களா...
அந்த குழந்தைக்காக தான் அவர்கள் உயிர் வாழுகிறார்கள். நய வஞ்சகத்துடன் குழந்தையை அபகரிக்க நினைக்கிறான் நாகராஜன். அவர்களின் மனப் போராட்டமே மீதிக் கதை. கடைசியில் சம்பத் இறந்து போகிறான். புவனா தன் குழந்தையுடன் தனி மரமாக...
மனிதனிடம் நியாயமாக இருக்க வேண்டிய எந்த குணமும் இல்லாத
ஒருவன்,வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெறுகிறான். எல்லா குணங்களும் அமையப் பெற்ற ஒருவன்... வாழ்க்கையில், வளர்ச்சி குறித்து பெரிதாக கவலைப்படவில்லை. இரு துருவமாய் விளங்கும் இருவரையும் நட்பு இணைத்தது. சூழ்நிலை பிரித்து போட்டது. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.அங்கங்கே வழக்கமான சென்டிமெண்ட் காட்சிகள் இருந்தாலும், கதையின் கதை மாறுபட்டது. மேலும் நாயகர்கள் தங்கள் வாழ்க்கையை ப்ளாட்பார்மில் துணி விற்பவர்களாக தான் துவக்குகிறார்கள். ஒரளவுக்கு யதார்த்த தன்மை நிறைந்த படம். எந்த வித சமரசங்களுக்கும் இடம் தராமல் எடுத்து இருப்பார்கள்.
ஆரம்பக்கால ரஜினியை ரசிக்க இரண்டு கண்கள் போதாது. பாத்திரத்துக்கு தகுந்த ரஜினியின் தோற்றம் அம்சமாக பொருந்தியது. அழகான சிவகுமார் ப்ளேபாயாக. ஏமாறும் அபலையாக சுமித்ரா. மகரிஷியின் கதைக்கு, வசனமும் பாடல்களும் எழுதியவர் பஞ்சு அருணாசலம். படம் முழுக்க நல்ல வசனங்கள். இயக்கம் எஸ்.பி. முத்துராமன்.எஸ்பி. முத்துராமன் தானே என்று யாரும் நினைத்து விட வேண்டாம். நிறைய நல்ல படங்களையும் இயக்கியுள்ளார்.
இசை... இசை ஞானி. மூன்று அற்புதமான பாடல்கள். "ராஜா என்பார்... மந்திரி என்பார்... ராஜ்யம் இல்லை ஆழ, ஒரு ராணியும் இல்லை வாழ" என்னை வெகுவாக கவர்ந்த பாடல் அது. இன்னொரு பாடல் "விழியிலே
மலர்ந்தது... உயிரிலே கலந்தது."... வெற்றி பெற்ற லோ படஜெட் படம்.
இந்த தலைமுறை இயக்குனர்கள், நடிகர்கள் என்று சகலரும், சென்ற
தலைமுறை திரைக்கலைஞர்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. கற்றுக்கொள்ளுங்கள். பழைய படங்களை நிறைய ரீமேக் செய்கிறார்கள். அந்த வகையில் புவனா ஒரு கேள்விக்குறியை ரீமேக் செய்யலாம். புதிய இயக்குனர்களுக்கு ஒரு சவாலான கதை தான்.

No comments:
Post a Comment