Pages

Thursday, 2 September 2010

BHOBAL EXPRESS 1999 HINDI FILM

போபால் எக்ஸ்பிரஸ்

போபால் பற்றி நான் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் புத்தகம் குறித்து தகவல்கள் சேகரித்துக்கொண்டிருந்தபோது, போபால் எக்ஸ்பிரஸ் திரைப்படம் பற்றி அறிந்துகொண்டேன். 'போபால் பற்றிய மிக முக்கியமான பதிவு', 'நஸ்ருதின் ஷாவின் நடிப்பு மெச்சத்தக்கது', 'பாடல்களும் சினிமாத்தனங்களும் இல்லாத நேர்மையான படம்' என்று இணையத்தில் ஏகப்பட்ட பாராட்டுகள். சரி பார்த்துவிடலாம் என்று முடிவு செய்து தேடியபோது, ஆங்கில சப்டைட்டில்ஸ் கொண்ட ஒரு பிரதி உடனே கிடைத்தது.

கதாநாயகன், யூனியன் கார்பைட் நிறுவத்தில் பணியாற்றுகிறான். இயந்திரங்களைப் பழுது பார்ப்பதில் வல்லவன். உருது கவிதைகள் நிறைய சொல்பவன் என்பதால் தொழிற்சாலையிலும் வெளியிலும் அவனுக்கு ஏகப்பட்ட நண்பர்கள். அவர்களுள் ஒருவர், ஆட்டோ ஓட்டுனரான நஸ்ருதின் ஷா. முன்னாள் யூனியன் கார்பைட் ஊழியர். ஆள்குறைப்பு நடத்தியபோது, துரத்திவிடப்பட்ட எண்ணற்ற ஊழியர்களுள் ஒருவர். அதனால், இயல்பாகவே யூனியன் கார்பைட் மீது நஸ்ருதின் ஷாவுக்குக் கோபமும் வெறுப்பும் இருந்தது.

அடிக்கடி கதாநாயகனிடம் புலம்புவார். எதற்காக அங்கே அடிமையாக இருக்கிறாய்? என்னதான் மாடாக உழைத்தாலும் உன்னையும் ஒருநாள் துரத்தத்தான் போகிறார்கள். என்னைப் போல் சுதந்தரமாக ஆட்டோ ஓட்டி ஏன் சம்பாதிக்கக்கூடாது? ஆனால், நாயகனுக்கு ஆட்டோ மீது ஆர்வம் இல்லை. யூனியன் கார்பைட் தன்னைக் கைவிடாது என்று திடமாக நம்பினான். தன் மனைவிக்கு இணையாக கார்பைடையும் கவிதையையும் அவன் நேசித்தான்.

ஒரு நாள், கதாநாயகி தன் பெற்றோர் வீட்டுக்குச் செல்கிறார். வா, கொஞ்சம் வாழ்க்கையை ரசிக்கலாம் என்று நாயகனை ஒரு நடன வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் நஸ்ருதின் ஷா. அங்கே ஷப்னா ஆஸ்மி நடனம் ஆடுகிறார். இருவரும் மது அருந்திக்கொண்டே ரசிக்கிறார்கள்.

அதே இரவு, யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் விபத்து நிகழ்கிறது. இரவின் பின்னணியில் புகைப்போக்கியில் இருந்து நீல நிறத்தில் புகை வெளியேறுகிறது. அருகில் உள்ள பகுதிகளில் பரவுகிறது. மக்கள் விழுந்தடித்து ஓடுகிறார்கள். ஓடுபவர்கள் அப்படியே சரிந்து விழுகிறார்கள். எங்கும் மரண ஓலம்!

கேளிக்கை முடிந்ததும், கவிதை பாடிக்கொண்டே தடுமாறியபடி தெருவுக்குள் நுழைகிறார்கள் இருவரும். நஸ்ருதின் ஷா முதலில் சுதாரித்துக்கொள்கிறார். கார்பைட் நாய்கள் செய்த வேலை என்று கத்துகிறார். வந்து விழுந்த சிலரை ஆட்டோவுக்குள் ஏற்றி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு நாயகனைப் பணிக்கிறார். நாயகன், மருத்துவமனைக்கு விரைகிறான். அங்கே, நோயாளிகள் பெரிய வரிசையில் இருமியபடி காத்திருக்கிறார்கள். ஸ்ட்ரெச்சர்கள் பறக்கின்றன. மருத்தவர்களுக்கு என்ன மருந்து தருவது என்று தெரியவில்லை. கார்பைடை தொலைபேசியில் அழைத்தால், பதிலில்லை.

நான் கார்பைட் ஊழியன்தான், நேரில் சென்று பார்க்கிறேன் என்று ஓடுகிறான் நாயகன். சொல்லுங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன மருந்து தரவேண்டும் என்று கார்பைட் மேலாளரிடம் கத்துகிறான். அவர்கள் அவனை உதாசீனம் செய்கிறார்கள். கோபமும் ஏமாற்றமும் பொங்கி வருகிறது.

அதற்குள் நஸ்ருதின் ஷா இறந்துபோகிறார். என்ன செய்து என்று தெரியாமல் விழித்து நிற்கும்போதுதான் சட்டென்று நினைவுக்கு வருகிறது. ஊருக்குப் போன மனைவி, அன்றைய தினம் திரும்பி வருகிறார். ஆட்டோவை எடுத்துக்கொண்டு பறக்கிறான் நாயகன். போபாலுக்குள் நுழைவதற்கு முன்னால் அவளைத் தடுத்து நிறுத்தியாகவேண்டும்.

ஆனால் அதற்குள் புகையோடு சேர்ந்து ரயிலும் போபாலுக்குள் நுழைந்துவிடுகிறது. ரயிலில் இருந்து வெளியேறும் அனைவரும் மயங்கி சரிந்து, இறக்கின்றனர். நாயகி மட்டும மீண்டு, அருகிலுள்ள ஒரு டெலிஃபோன் பூத்தில் ஒளிந்திருக்கிறாள். நாயகன் பரவசத்துடன் நாயகியைக் கண்டடைகிறான். தன் தாயைக் கட்டிப்பிடித்தபடி மயங்கிக்கிடந்த ஒரு குழந்தை சட்டென்று கண் விழித்துப் பார்க்கிறது. நாயகனும் நாயகியும் அந்தக் குழந்தையை எடுத்துக் கொள்கிறார்கள். இறந்து போன நஸ்ருதின் ஷாவின பெயர் அந்தக் குழந்தைக்குச் சூட்டப்படுகிறது. சுபம்.

டொமினிக் லாபயர், ஜாவியர் மோரோ எழுதிய Five Past Midnight in Bhopal ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு சதவீதத்தைக்கூட இந்தப் படம் ஏற்படுத்தவில்லை. யூனியன் கார்பைட் விவகாரத்துக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைக் காட்டிலும், நடன அரங்கில் நடைபெற்ற ஆடல், பாடல் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. மக்கள் என்ன ஆனார்கள் என்று அல்ல, நாயகனும் நாயகியும் ஒன்று சேர்வார்களா என்னும் துடிதுடிப்பையே பார்வையாளர்களிடம் ஏற்படுத்த முயல்கிறது இந்தப் படம். நாயகன், நாயகி, நஸ்ருதின் ஷா போல் போபாலும் இதில் ஒரு காரக்டர். அவ்வளவுதான்.

ஒரு மசாலா படமாக இருந்திருந்தால் இப்படி எடுத்திருப்பார்கள். ரயில் வண்டியில் வில்லன் ஒருவன் குண்டு வைத்துவிட்டான். ரயிலில் உள்ளவர்கள் இறந்துவிட்டார்கள். நாயகி மட்டும் தப்பிவிடுகிறாள். குண்டுக்குப் பதிலாக போபால் என்பதால் மட்டும் இது உயர் ரக படமாக மாறிவிடவிலை.

கன்னத்தில் முத்தமிட்டால், பம்பாய், ரோஜா ஆகிய படங்கள் இலங்கை பற்றியும் பம்பாய் குண்டுவெடிப்பு பற்றியும் காஷ்மீர் பிரச்னை பற்றியும் எந்த அளவுக்கு 'ஆழமாக' பதிவு செய்ததோ, அதே அளவுக்குப் போபால் பற்றியும் இந்தப் படம் பதிவு செய்திருக்கிறது.

எரிந்துகொண்டிருக்கும் ஒரு பிரச்னையை ஒரு திரைப்படத்தால் எந்த அளவுக்கு நீர்த்துப் போகச் செய்யமுடியும் என்பதைக் காட்ட போபால் எக்ஸ்பிரஸ் உதவும். உலகின் மிகக் கோரமான, மிகக் கொடூரமான ஒரு பேரழிவுச் சம்பவத்தை, நாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான உணர்வுப் போராட்டமாகச் சுருக்கிவிடுகிறது இந்தப் படம்.

திறமையின் மறுபக்கம் ......தெளிவான தைரியம் ..the yes man

Andy Bichlbaum, Mike Bonanno இருவரும் The Yes Men குழுவைச் சேர்ந்தவர்கள். உலகின் பணக்கார நிறுவனங்களுக்கு இவர்கள் எதிரிகள். பிபிசி தொடங்கி நியூ யார்க் டைம்ஸ் வரை பல செய்தி நிறுவனங்கள் இவர்களைக் கண்டு அலறியிருக்கிறது. திரைப்படங்களில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய அசாதாரணமான விஷயங்களை இந்த இருவரும் நிஜ வாழ்வில் நடத்திக்காட்டியிருக்கிறார்கள்.

எது பிடிக்கவில்லையோ அதுவாக மாறிவிடு என்பதுதான் இவர்களது சித்தாந்தம். புஷ்ஷின் அராஜக ஆட்சி பிடிக்கவில்லை என்பதால் அவர் பெயரில் கிண்டலாக ஒரு வலைப்பதிவு ஆரம்பித்தார்கள். (www.gwbush.com என்னும் முகவரியில் தொடங்கப்பட்ட அந்தத் தளம் தற்போது உபயோகத்தில் இல்லை.) என்னை அபாண்டமாகவும் அநியாயமாகவும் விமரிசனம் செய்கிறார்கள் என்று புஷ்கூட வருத்தப்பட்டுக்கொண்டார்.

உலக வர்த்தக மையம் செயல்படும் விதம் அதிருப்தி அளித்ததால், அவர்களைப் போல் தோற்றமளிக்கக்கூடிய ஒரு போலி வலைத்தளத்தை ஆரம்பித்து, தாங்கள் விரும்பிய செய்திகளைப் பரப்பினார்கள். பல சர்வதேச அமைப்புகள் அசல் உலக வர்த்தக மையம் என்று நினைத்து இவர்களை இணையத்தின் மூலம் தொடர்பு கொண்டு, தங்கள் நாட்டுக்கு வந்து உரையாற்ற அழைத்தார்கள்.

நவம்பர் 12, 2008 தேதியிட்ட நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையை 80,000 பிரதிகள் அச்சிட்டு நியூ யார்க்கிலும் லாஸ் ஏஞ்ஜெலஸிலும் விநியோகித்தார்கள். இராக் யுத்தம் முடிந்துவிட்டது என்பதுதான் தலைப்புச் செய்தி. பத்திரிகையைப் படித்த பலரும் இராக் யுத்தம் நிஜமாகவே முடிந்துவிட்டதாக நம்பினார்கள். பரவாயில்லையே, துணிச்சலாக எழுதுகிறார்களே என்று பலரும் ஆச்சரியமடைந்தார்கள். தேசிய அளவில் மருத்துவச் சேவை மையம் தொடங்கப்போகிறோம் என்றது ஓர் அரசு தரப்பு செய்தி. நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கு அதிகபட்ச சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றது இன்னொரு செய்தி. மற்றொன்றில், ஜார்ஜ் புஷ் தன் தவறுகளைப் பட்டியலிட்டு, நான் குற்றவாளிதான் என்று ஒப்புக்கொண்டிருந்தார்.

1984 போபால் பேரழிவுக்காக,டவ் கெமிக்கல்ஸை பழி தீர்க்க விரும்பினார்கள் யெஸ் மென் இரட்டையர்கள். யூனியன் கார்பைட் நிறுவனத்தை வாங்கிக்கொண்ட டவ் கெமிக்கல்ஸ் பாதிக்கப்பட்ட போபால் மக்களுக்கு நிவாரணம் அளிக்க மறுத்து வந்தது. யூனியன் கார்பைட் செய்த தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்பது டவ் கெமிக்கல்ஸின் நிலைப்பாடு.

இந்த முறையும் ஊடகத்தையே யெஸ் மென் தமது ஆயுதமாக எடுத்துக்கொண்டது. வழக்கம் போல், டவ் கெமிக்கல்ஸ் பெயரில் ஒரு போலி வலைத்தளத்தைத் தொடங்கினார்கள். டவ் நிறுவனம் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் விமரிசனப்பூர்வமான கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. எங்களைத் தொடர்பு கொள்ள ஈமெயில் அனுப்புங்கள் என்று ஒரு சுட்டியையும் திறந்து வைத்தார்கள். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எது அசல் டவ், எது போலி டவ் என்று கண்டுபிடிக்கமுடியாதபடி வடிவமைப்பு செய்யப்பட்டிருந்தது.

விரித்து வைத்திருந்த வலையில், பிபிசி சிக்கிக்கொள்ளும் என்று யெஸ் மென் எதிர்பார்க்கவில்லை. பிபிசி செய்திப் பிரிவில் இருந்து ஒரு ஈமெயில் வந்திருந்தது. நாங்கள் உங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பேட்டி எடுக்க விரும்புகிறோம். சம்மதமா? உடனுக்குட்ன் டவ் கெமிக்கல்ஸில் இருந்து பதில் வரும் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. பிபிசி உற்சாகமடைந்தது. தேதி குறித்துக்கொண்டார்கள். டிசம்பர் 3, 2004. போபால் சம்பவம் நிகழ்ந்து இருபது ஆண்டுகள் பூர்த்தியானதை நினைவூட்டும் தினம். பிபிசி நிறுவனத்தில் இருந்த பலருமேகூட இந்தப் பேட்டியை படபடப்புடன் எதிர்நோக்கியிருந்தனர். மிக முக்கியமான தினத்தில் ஒளிபரப்பாகப் போகும் மிக அரிதான ஒரு பேட்டி அல்லவா?

ஏற்பாடு செய்தபடியே பேட்டி ஒளிபரப்பானது. அது ஒரு நேரடி ஒளிபரப்பு. இரட்டையரில் ஒருவரான Andy Bichlbaum, தன்னை டவ் நிறுவனத்தின் பிரதிநிதியாக அறிமுகப் படுத்திக்கொண்டார்.

சுருக்கப்பட்ட வடிவம் கீழே.

பிபிசி : வணக்கம், டவ் கெமிக்கல்ஸ் சார்பாக Jude Finisterra என்பவர் இன்று நம்முடன் பாரீசில் இருந்து உரையாற்றவிருக்கிறார். யூனியன் கார்பைட் நிறுவனத்தை டவ் கெமிக்கல்ஸ் டேக் ஓவர் செய்துள்ளது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். வணக்கம், மிஸ்டர் ஜூட். உங்களுக்கு எங்கள் காலை வணக்கம். போபால் விவகாரத்துக்கு இப்போதாவது நீங்கள் பொறுப்பேற்கிறீர்களா?

ஜூட் : ஆம், பொறுப்பேற்கிறோம். டவ்வில் எங்கள் அனைவருக்கும் இன்று ஒரு முக்கிய தினம். உலகிலுள்ள பல லட்சக்கணக்கான மக்களுக்கும் இன்று ஒரு முக்கியமான தினம். பேரழிவு நடந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும், இன்றாவது அதற்காகப் பொறுப்பேற்றுக்கொள்கிறோமே என்னும் வகையில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

12 பில்லியன் டாலர் மதிப்பில் ஒரு திட்த்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பாதிக்கப்பட்ட 1,20,000 பேருக்கு மருத்துவ சிகிச்சைக்காக நிவாரண உதவி வழங்கவிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் 500 டாலருக்கு மேல் கிடைக்கும்படி செய்துள்ளோம். இது நிச்சயம் போதுமானதாக இருக்காது என்று தெரியும். இன்னும் சொல்லப்போனால், ஓராண்டுக்கான சிகிச்சை செலவுதான் இது. வேறு திட்டம் மூலமாக அவர்களை திருப்திபடுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.

தவிரவும், யூனியன் கார்பைட் போபாலைவிட்டு அகன்றபோது, டன் கணக்கில் விஷக் குப்பைகளை விட்டுச் சென்றனர். குழந்தைகள் இன்னமும் அங்கே விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்பகுதி நிலத்தடி நீரை மக்கள் இன்னமும் பருகிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் போபால் பகுதியைச் சுத்தமாக்கப்போகிறோம்.

பிபிசி : ஓ, இது நிஜமாகவே மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்திதான் ஜூட்.

ஜூட் : அது எங்கள் கடமையல்லவா?

பிபிசி : அப்படியானால், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் சட்டப்பூர்வமாக நடந்து வரும் வழக்குகளைச் சந்திக்கவும் நீங்கள் தயாரா?

ஜூட் : நிச்சயமாக. அது மட்டுமல்ல, வாரன் ஆண்டர்சனை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றவேண்டும் என்றும் அரசாங்கத்தைக் கேட்கப்போகிறோம். மேலும், யூனியன் கார்பைட் மேற்கொண்ட ரசாயன ஆய்வுகள் குறித்த விவரத்தையும் முழுவதுமாக வெளியிடப்போகிறோம்.

டவ் நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்து உலகம் முழுவதிலும் இருந்து பல ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் எழுப்பியிருக்கிறார்கள். நீண்ட கால நோக்கில் அவை அழிவை ஏற்படுத்தக்கூடியவை என்று கணிக்கிறார்கள். இது குறித்து ஆய்வுகளிலும் நாங்கள் இறங்கியிருக்கிறோம்.

பிபிசி : ஓ, இத்துடன் இந்த உரையாடலை நிறுத்திக்கொள்ளலாம். எங்களுடன் கலந்துகொண்டு உரையாடியதற்கு மிக்க நன்றி ஜூட்.

ஜூட் : நன்றி.

அவ்வளவுதான்.

அதற்குப் பிறகு இந்தப் பேட்டியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டே இருந்தார்கள். எழுத்தில், பேச்சில், உரையாடலில் இந்தச் செய்தி தீயாகப் பரவிக்கொண்டிருந்தது. மூன்று மணி நேரங்களில், டவ் கெமிக்கல்ஸின் பங்கு 4.2 சதவீதம் இறங்கி, 2 பில்லியன் டாலர் இழப்பானது.

பின்னரே, பிபிசி விழித்துக்கொண்டது. தவறுக்கு வருந்துகிறோம், இப்போது ஒளிபரப்பான செய்தி உண்மையானதல்ல. யாரோ ஒருவர் உள்ளே புகுந்து ஏமாற்றியிருக்கிறார்கள். நாங்களும் ஏமாந்துவிட்டோம். விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம். டவ் நிறுவனம், தயவு செய்து மன்னிக்கவும்.

நான்கு தினங்கள் கழித்து Democracy Now இணைய இதழுக்காக, ஆமி குட்மேன் என்பவருக்குப் பேட்டி அளித்தார் 'ஜூட்'.

'தெளிவான திட்டங்களுடன் இந்த நாடகத்தை நடத்தினோம். பேட்டி ஒளிபரப்பாகும் ஒவ்வொரு விநாடியும், இது எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். பிபிசியோ டவ் நிறுவனமோ சுதாரித்துக்கொண்டுவிடும் என்று எதிர்பார்த்தேன். கட், கட் என்று எந்நேரமும் கத்திரி போடுவார்கள் என்று நினைத்தேன். பேட்டி முழுவதுமாக ஒளிபரப்பானதோடு மட்டுமல்லாமல், ராய்டர்ஸ் உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்கள் இந்தச் செய்தியை உலகம் முழுவதும் கொண்டு சென்றன.'

தி யெஸ் மென் அரங்கேற்றிய நாடகம் இத்துடன் முடியவில்லை.

பிபிசி வெளியிட்ட மறுப்பைத் தொடர்ந்து, டவ் நிறுவனத்தின் சார்பாக, இரட்டையர்கள் இன்னொரு அதிகாரபூர்வமான அறிவிப்பை டவ் லெட்டர் ஹெட்டில் வெளியிட்டார்கள்.

'இன்று காலை பிபிசியில் ஒளிபரப்பான செய்தி தவறு. பேட்டியளித்தவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது. அந்தப் பெயரில் எந்தவொரு நபரும் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றவில்லை. டவ் நிறுவனம் போபால் பேரழிவுக்குப் பொறுப்பேற்றாலும், சம்பவம் நடந்த இடத்தைச் சுத்தப்படுத்தாது. செலவு அதிகம் ஆகாது என்றாலும் அதைச் செய்ய நாங்கள் தயாராக இல்லை. நிவாரணத் தொகை தலைக்கு 500 டாலர் மட்டுமே. இந்தியர்களுக்கு இது அதிகம்தான்.'

பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் இந்தச் செய்தி சென்று சேர்ந்தது. யாரும் சந்தேகிக்கவில்லை. டவ் நிறுவனத்தின் மறுப்பு என்னும் த்லைப்பில் இந்த அறிக்கை மறு நாள் உலா வந்தது. கூகிளின் டாப் தேடலில் இது முதலிடம் பெற்றது.

தி யெஸ் மென் இரட்டையர்களுக்கு இரட்டை வெற்றி. முதல் செய்தியில், டவ் நிறுவனம் போபால் பேரழிவுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டது. இரண்டாவது செய்தியில், குற்றத்தை ஒப்புக்கொண்டது. ஆனால், நிவாரணம் அளிக்கமுடியாது, விபத்து நடந்த இடத்தைச் சுத்தப்படுத்தமுடியாது என்று மறுப்பு வெளியிட்டது.

ஆனாலும், இருவருக்கும் ஒரு வருத்தம். 'இந்தச் செய்தி உண்மை என்று எண்ணி இரண்டு மணி நேரங்கள் போபால் மக்கள் கனவு கண்டிருப்பார்கள். அது வருத்தமளிக்கிறது. ஆனால், இருபது ஆண்டுகளாக அவர்கள் கண்டு வரும் நிறைவேறாத கனவுடன் ஒப்பிடும்போது இது சிறியதாகிவிடுகிறது. ஒன்று மட்டும் நிச்சயம். டவ் மேற்கொண்டு எந்தவிதமான உதவியையும் யாருக்கும் செய்யப்போவதில்லை. அவர்களை யார் நம்பினாலும் அவர்கள் ஏமாற்றப்படுவார்கள்.'

குறை கூறுவது எளிது ....!

சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?"
வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார். "ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"
அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை...."
"நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?"
"அதில்லை..."
"இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?"
"இல்லை"
"இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?"
"அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.

"ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே" என்று
சாக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.
மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா?


மற்றவர்கள் விஷயங்களையும், அவர்களது பணத்தையும் நம்மில் பெரும்பாலானோர் நம்முடையதைப் போல் பயன்படுத்தத் தவறி விடுகிறோம். ஒருவித அலட்சியம் தானாக வந்து விடுகிறது. அதன் விளைவுகள் நம்மை பாதிப்பதில்லை என்பதும் அவர்களை எந்த அளவில் பாதிக்கிறது என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம் என்பதுமே அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.
எங்கோ படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.
சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னார். "சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா".
சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? "குருவே அந்த பஞ்சு காற்றில் இன்னேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?"


"ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டு வர முடியவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?"
அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது. கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்த அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.
நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன அபிப்பிராயங்களை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றி சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம், உண்மையைத் தானே சொல்கிறோம் என்று மற்றவரின் பலவீனமான உண்மைகளையும், நல்லதல்லாத உண்மைகளையும் சொல்லக்கூடும். அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது. "நம்முடைய எல்லா உண்மைகளையும் நாம் வெளியில் சொல்கிறோமோ? வெளியே நம்மைப் பற்றி தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமான உண்மைகள் நம் வாழ்வில் இல்லவே இல்லையா?"
நாம் மனிதர்கள். நம்முள் மிக மேன்மையாவர்கள் கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன் எத்தனையோ தவறுகளை செய்து அதிலிருந்து கற்றிருக்கிறார்கள்; எத்தனையோ பலவீனங்களுடன் போராடிய பிறகே வென்றிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி நாம் சொல்லும் தவறுகளை நாம் செய்யாதிருக்கக்கூடும். ஆனால் மற்ற எத்தனையோ தவறுகள் நாமும் செய்கிறோம். இப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் பற்றி வம்பு பேசுவது நியாயமா?
இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம் நல்லதல்லாதவற்றைச் சொல்ல வந்தால் பெரிய ஆர்வம் காண்பிக்காதீர்கள். சாக்ரடீஸ் போல சொல்ல முடியா விட்டாலும் நீங்கள் ஆர்வம் காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம் சொல்வதைத் தானாகக் குறைத்துவிடுவார்கள். அதே போல் மற்றவர்களைப் பற்றி நல்லதல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும் போது உதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமான காரியம் அதுவாகத் தான் இருக்க முடியும்